<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=10805719&amp;blogName=%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.....!&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLUE&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://hariweb.blogspot.com/search&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http://hariweb.blogspot.com/&amp;vt=7475592455443458796" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

உணர்வின் வரிகள்.....!

உங்கள் வருகைக்கு நன்றிகள்!

Sunday, March 13, 2005

உலகத் தமிழினமே!

உலகத் தமிழினமே!
முழக்கம் இங்காகட்டும்.
முரசு உனதாகட்டும்.


வெளியில் வராத குரல்களாக
விழுங்கப்படுகிறது எம் வாழ்வு.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட தீராப்பிணியனின்
சிரிப்பு போலாச்சு எம் இருப்பு
யாரோடு நோகலாம்?
யார்க்கெடுத்துரைக்கலாம்?
எத் தெய்வம் சபித்தது எம் தலையில்?
தீவொன்றில் தனித்து விடப்பட்டவர்களாக நாங்கள்.
எவரெம் குரல்களை உலகுக்குச் சொல்வரோ?
எம்மை நோக்கி வையக விழிகள் எப்போ திறக்கும்?
இருபத்தோராம் நூற்றாண்டுக்கு
தாலி கட்டத் தயாராகிறது உலகம்.
பதினாறாம் நூற்றாண்டிற் படுத்துக் கிடக்கின்றோம் நாம்.
நிரவ முடியாத அகழி.
நினைக்க முடியாத தொலைவு.
குறுக்கு வெட்டாக துண்டிக்கப்பட்டவனே உயிர்க்கும் போது
நெருப்புச் சுட்ட புண்ணுக்கே எங்களுக்கு மருந்து கிடையாது.
உலகெங்கும் அடித்து விரட்டப்பட்ட மலேரியா கூட
ஓடிவந்து இங்கே தான் ஒதுங்கிகொண்டது
தடிமல் மருந்துக்கே தட்டுப்பாடு.
இங்கு மருத்துவர்கள் கைபிடிப்பது
வைத்தியம் செய்யவல்ல.
வெறும் மன நிறைவுக்கே.
சுக்கும், மிளகும், சுடுநீருமே உயிரைத் தாங்கிக்கொள்கிறது.
எத்தனைக்கென்று தான் அழுவது?
ஊற்றடைத்துக் கொண்டது விழிக்கிணறு.
உலகமேன் ஊமையானது?
பூமிப்பந்தின் பரப்பெங்கும் தமிழன் இருக்கின்றான்.
எம் குரல்கள் மட்டும் ஏன் கேட்கவில்லை?
உறக்கம் கலைக உலகமே.
இங்கே சேடமிழுத்துக் கிடக்கிறது மனிதப் பிண்டம்.
எமக்காகவும் எவரெனினும் பேசுங்களேன்.
உரிமைக் குரல் கொடுக்கும் ஒரு இனத்துக்கு
இதுதானா கதி?
ஆரோகணித்திருக்கச் சிம்மாசனமா கேட்டோம்?
கால் மடித்திருக்கக் கதிரை தானே கேட்கின்றோம்.
இதற்காகவா இந்தப் பாரச்சிலுவை?
இயக்கர்களாக அவர்களும்...
நாகர்களாக நாங்களும்..
இல்லையெனில்...
அவர்களாக அவர்களும்.....
நாங்களாக நாங்களும்
இதுவும் இல்லையெனில்
ஏதோ ஒரு வழியில்
ஒன்றாய் இருந்த வீட்டிற்தானே உரிமை கேட்கின்றோம்.
பாதிவீட்டை தந்தால் போதும்
மீதிவீடு அவர்களுக்குத்தானே
இந்தப் பிரிவிடுதலுக்கேன் இத்தனை கொதிப்பு?
மிஞ்சிய சோறுவாங்கிக் கும்பிடுபோடுவதற்கு
நாங்கள் இராப்பிச்சைகாரர்கள் அல்ல.
தாம்பத்தியம் தள்ளாடும் போது
விவாகரத்துத்தான் விமோசனம் அளிக்கும்.
சமாதானத் தூதர்கள் தோற்றுப்போனபோதும்,
பேச்சுவார்த்தை மேசையின் பூச்சழிந்த பின்னருமே
நாங்கள் போருக்கெழுந்தோம்.
இடிக்க வந்தது மாடு.
அடித்தோம்.
மாட்டுக்கு அடித்தல் பாவமென மனுப்போடுபவர்களே!
எங்கள் கூட்டையே குலைத்தது குரங்கு.
குரங்கையேன் நீங்கள் குற்றங் காணவில்லை?
யானை வந்தழிக்கிறது எங்கள் புலவை.
வெடிகொழித்திப் போடுகின்றோம்.
மிதிக்கும் போது ஊமையான வாய்கள்.
கலைக்கும் போது மட்டும் கண்டிக்கின்றன.
எருமைத்தோல் உடுத்தவனா தமிழன்?
சுரணையற்று கிடப்பதற்கு
உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்த
ஒரு இனத்தின் ஓரத்தில்
நெருப்பு பொறியொன்று நீறுபூத்துக் கிடந்தது.
அது....... பிரபாகரன்.
கோபம் உரசிய போது தீக்குச்சி பற்றிக்கொண்டது.
இன்று தீச்சுவாலை முளாசி எறிகிறது.
தர்மயுத்தமென்பதே தமிழீழப்போரானது.
பாய்ச்சல் நடக்கும் போது
பாவ புண்ணியக் கணக்கு கொஞ்சம் கூடும், குறையும்.
அதற்கேன் இத்தனை ஒப்பாரி?
மரங்களை தறிக்காதே,
சூழலை மாசு செய்யாதே,
மிருகங்களை வதையாதே,
பூக்களை கிள்ளாதே என்று
குரல்கள் கேட்கின்றனவே.
ஈழத்தமிழனை எறித்து முடிக்காதேயென்று
உலக முகடையிடிக்கும் குரல்கள் எப்போது எழும்?
அவலக்குரலை எப்போது உலகமறியும்?
எல்லைகளை,
வேலிகளை,
வரம்புகளை கடந்து
ஈழத்தமிழரைத்தாங்க நீளும் கரங்கள்
எப்போது கிட்டும்?
அழியும் வரை போராடுவோம் என்பதில் அர்த்தம் கிடையாது.
கிட்டும் வரை எட்டுவோம்.
உயிரெனப்படுவது மானம்.
அதையிழந்து வாழ்வதென்பது சாவுக்குச் சமம்.
பெரும்புயலில் அல்லாடுகிறது எம் போர்ப்படகு.
கரையேறக் கயிறெறியுங்கள்
உலகத் தமிழனமே!
உன்போர் இது... உனக்கான போரிது.
முழக்கம் இங்காகட்டும்.
முரசு உனதாகட்டும்
எம்மை காசுக்கு யாசிக்கவிடாதே.
வாரிவழங்கு.
தாங்கும் தோள்களிலொன்று உந்தோளுமாகட்டும்.
மூட்டம் போட்ட மேகத்தைக் கலைத்து
உரிமைப் போருக்கு ஊட்டம் கொடு.
வாழ்ந்தான் தமிழனென வரலாறு எழுதப்படும் போது
முன்னுரையில் உன் பெயர் இருக்கட்டும்.
பரணிக்கு நாயகர்களைப் பாட
உலகெங்கும் உள்ள புலவர்களே எழுக.
பொய்மைத்திரி அணைந்து போக
உண்மையை வாயால் ஊதுங்கள்.
சத்தியம் ஜெயம்.

புதுவை இரத்தினதுரை
புரட்டாதி, ஐப்பசி 1997

4 Comments:

  • At 1:25 AM, Anonymous Anonymous said…

    puthuvaiyin kavithaikal eluchchi ooddupavai.you are doing a good job.please continue.

     
  • At 6:17 AM, Blogger ஹரி said…

    நன்றிகள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தொடரந்து தர முயற்சி செய்கின்றேன்!

     
  • At 12:54 AM, Blogger shanmuhi said…

    புதுவை இரத்தினதுரையின் ஆக்கத்தினை வாசிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி

     
  • At 5:46 AM, Blogger ஹரி said…

    சண்முகி அக்கா உங்கள் வருகைக்கு நன்றிகள்

     

Post a Comment

<< Home

 
Tamil Top BlogsFree Web Counter
Free Hit Counter